திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.73 திருப்பட்டீச்சரம் - திருவிராகம் பண் - சாதாரி |
பாடல்மறை சூடன்மதி பல்வளையொர்
பாகமதில் மூன்றொர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசரம்
மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டிவினை வீடுமவரே.
|
1 |
நீரின்மலி புன்சடையர் நீளரவு
கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை
கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர
மேத்தவினை பற்றழியுமே.
|
2 |
காலைமட வார்கள்புன லாடுவது
கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமணம் நாறுபழை யாறைமழ
பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை
பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி
விண்ணுலகம் ஆளுமவரே.
|
3 |
கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக
மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி
பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட
னாதலது மேவலெளிதே.
|
4 |
மருவமுழ வதிரமழ பாடிமலி
மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை
அஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை
யாரையடை யாவினைகளே.
|
5 |
மறையின்ஒலி கீதமொடு பாடுவன
பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர்
பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை
யேற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர்
தீத்தொழில்கள் இல்லர்மிகவே.
|
6 |
பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை
யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி
வீதியழ காயதொகுசீர்
இறைவனுரை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி
பாடுமற வாதவவரே.
|
7 |
நேசமிகு தோள்வலவ னாகியிறை
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண
ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி
தாம்அமரர் விண்ணுலகமே.
|
8 |
தூயமல ரானும்நெடி யானும்அறி
யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி
வாரணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத
னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தஎளி
தாகுநல மேலுலகமே.
|
9 |
தடுக்கினையி டுக்கிமட வார்களிடு
பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கவசர் கத்துமொழி
காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர
மேத்தவினை பற்றறுதலே.
|
10 |
மந்தமலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி
ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதிலவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |